பெங்களூரு : தமிழ்ச் சங்கம் சார்பில் ஜன. 16-இல் பொங்கல் விழா

பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் சார்பில், பெங்களூரில் ஜன. 16-ஆம் தேதி பொங்கல் விழா நடைபெறுகிறது.


பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் சார்பில், பெங்களூரில் ஜன. 16-ஆம் தேதி பொங்கல் விழா நடைபெறுகிறது.
இதுகுறித்து பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன், செயலர் இராமசுப்பிரமணியன் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் சார்பில், பெங்களூரு, அல்சூரில் உள்ள தமிழ்ச் சங்க வளாகத்தில் ஜன. 16-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் விழா நடைபெறுகிறது. சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், காலை 8.30 மணிக்கு தமிழ்ச் சங்க மகளிர் பொங்கல் வைக்கின்றனர். இதைத் தொடர்ந்து, காலை 9 மணிக்கு பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இந்த விழாவில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். 
விழாவினை அல்சூர் வார்டு மாநகர மன்ற உறுப்பினர் மமதா சரவணன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து, தமிழுக்கும் அமுதென்றுபேர் என்ற பாரதிதாசனின் பாடலுடன் கலை நிகழ்ச்சி தொடங்குகிறது. 
கலை நிகழ்ச்சிகளில் சென்னையில் இருந்து மாற்று ஊடக மையத்தின் நாட்டுப்புறக் கலைஞர்களின் பறையாட்டம், சக்கையாட்டம், களியாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பம், தீப்பந்தம், வாள்வீச்சு, பெங்களூரில் உள்ள தமிழ்ப் பள்ளிகளின் சார்பில் பரதநாட்டியம், கோலாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், கிராமிய நடனம், பொங்கல் விழா நடனம் உள்பட பல்வேறு நாட்டுப்புற நடனங்களும் நடைபெறவுள்ளன. இதில் காமராசர் உயர்நிலைப் பள்ளி, அல்போன்சியார் உயர்நிலைப் பள்ளி, சங்கீதா நடனப் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இந்த அரிய வாய்ப்பை பெங்களூரு வாழ் தமிழர்கள் பயன்படுத்திக்கொண்டு தமிழர்களின் கலைகளை சுவைக்க இவ்விழாவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். விழாவில், தமிழ்ச் சங்க ஆண்டுவிழா போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு விருதும், பரிசும், பட்டயமும் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com