சர்வதேச அளவில் கல்வியில் இந்தியா சிறந்து விளங்குவதாக சிகாகோ பல்கலைக்கலைக்கழக வேந்தர் மைக்கேல் அமிரிடீஸ் தெரிவித்தார்.
பெங்களூரு ராமையா பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியது: கல்வியில் அமெரிக்கா சிறந்து விளங்கியதால், முன்பெல்லாம் கல்வி பயில மாணவர்கள் அதிக அளவில் அங்கு வந்தனர். தற்போது அதேபோல தரமான கல்வி இந்தியாவிலும் கிடைப்பதால், வெளிநாடுகளுக்கு கல்வி பயில வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கல்வியில் அமெரிக்காவிற்கு இணையாக, இந்தியாவும் சிறந்து விளங்குவதே இதற்கு காரணம்.
மேலும் இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழங்களில் ஒன்றாக விளங்கும் ராமையா பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்களுக்கு பட்டமளிக்கும் விழாவில் நான் கலந்து கொண்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பட்டம் பெற்ற மாணவர்கள் வேலைவாய்ப்பிலும் சிறந்து விளங்க வேண்டும். தரமான கல்வி பயிலும் மாணவர்களுக்கு சர்வதேச அளவில் அதிக வாய்ப்பு உள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் ராமையால் பல்கலைக்கழகத்தின் வேந்தர் எம்.ஆர்.ஜெயராம், பதிவாளர் புஷ்பாஞ்சலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.