இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அதுல்பர்மன் (37), பெங்களூரு டி.சி.பாளையாவில் தங்கி, கட்டடத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் பணிமுடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிய போது, பட்டரஹள்ளி மேடஹள்ளி சாலையில் மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த அதுல்பர்மன் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கே.ஆர்.புரம் போக்குவரத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல், பிகார் மாநிலத்தைச் சேர்ந்த நிரஞ்சன் நாயக் (50), பெங்களூரில் தங்கி கட்டடப் பணி செய்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் தேவனஹள்ளி டாபாகேட் அருகே சாலையைக் கடக்க முயன்ற போது, அவர் மீது மினி சரக்கு வாகனம் மோதியதில் படுகாயமடைந்த நிரஞ்சன்நாயக், மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுகுறித்து தேவனஹள்ளி போக்குவரத்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.