பல்வேறு திருட்டு வழக்குகளில் 4 பேரை கைது செய்த போலீஸார், ரூ. 3.30 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
ஹாசனைச் சேர்ந்த கணேஷ் (39), திப்டூரைச் சேர்ந்த குமார் (30), பெங்களூரு கெங்கேரியைச் சேர்ந்த ரியாஸ்ஹனீப் (33) ஆகியோர் சேஷாத்ரிபுரம் ஜக்கராயனா ஏரி பகுதியில் வசித்து வரும் ஆறுமுகம் என்பவரது வீட்டில் நவ. 6-ஆம் தேதி புகுந்து தங்க நகையை திருடிச் சென்றனர். இதுகுறித்து வழக்குப் பதிந்த ஸ்ரீராமபுரம் போலீஸார், 3 பேரையும் கைது செய்து, ரூ. 1.80 லட்சம் மதிப்புள்ள 60 கிராம் தங்கநகையை பறிமுதல் செய்தனர். இதேபோல பெங்களூரு நந்தினிலேஅவுட்டில் வசித்து வரும் ஜெயம்மா என்பவரது வீட்டில் ஜன. 15-ஆம் தேதி புகுந்து தங்கநகையை திருடிச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த அல்டாப் சையத் அப்துல்லா (30) என்பவரை கைது செய்த நந்தினி லேஅவுட் போலீஸார், ரூ. 1.50 லட்சம் மதிப்புள்ள 42 கிராம் தங்கநகையை பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.