கேரள மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிடம் ரூ. 1.12 கோடி மதிப்புள்ள 3.5 கிலோ தங்க நகையை மர்ம நபர் மோசடி செய்துள்ளனர்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜரினா ஜோசப். தங்க வியாபாரியான இவரிடம் பெங்களூரைச் சேர்ந்த ரோஹித் என்பவர் தனக்கு தங்க நகைகள் தேவைப்படுவதாகக் கூறியுள்ளார். இதனையடுத்து, கேரளத்திலிருந்து ரூ. 1.12 கோடி மதிப்புள்ள 3.5 கிலோ தங்க நகைகளை ஜோசப், சனிக்கிழமை பெங்களூருக்கு எடுத்து வந்துள்ளார். அவரிடம் ஹால்மார்க்கை சோதனை செய்ய வேண்டும் எனக் கூறி, அருகில் இருந்த சோதனை மையத்தில் தங்க நகைகளைக் கொடுத்து விட்டு அதற்கான பற்றுச்சீட்டை ஜோசப் பெற்று வந்துள்ளார். ஜோசப்பிடமிருந்த பற்றுச்சீட்டின் படத்தை செல்லிடப்பேசியில் எடுத்துச் சென்ற ரோஹித், சோதனை மையத்துக்குச் சென்று, தங்கநகையை வாங்கிக் கொண்டு தலைமறைவாகியுள்ளார். தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ஜோசப், காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து சிட்டி மார்கெட் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.