முறைகேடான முறையில் மேயர் பதவியைப் பிடிக்க காங்கிரஸ், மஜத கட்சிகள் முயற்சி மேற்கொண்டுள்ளன என்று பெங்களூரு மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் பத்மநாபரெட்டி தெரிவித்தார்.
பெங்களூரில் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:- பெங்களூரு மாநகராட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக காங்கிரஸ், மஜதவினர் முறைகேடான முறையில், மேயர் பதவியை பிடித்து வருகின்றனர். வெளியூர்களில் வசிக்கும் அந்தக் கட்சிகளின் சட்ட மேலவை உறுப்பினர்களை, பெங்களூரில் வசிப்பதாகத் தெரிவித்து, வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேயர் தேர்தலில், அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை அளிப்பதால், காங்கிரஸ்- மஜத கூட்டணி தொடர்ந்து 4 ஆண்டுகளாக வெற்றி பெற்று வருகிறது. விரைவில் நடைபெற உள்ள மேயர் தேர்தலில் இந்த வழிமுறைகளைப் பின்பற்றி வெற்றி பெற அக்கட்சியினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
198 வார்டுகள் உள்ள பெங்களூரு மாநகராட்சியில் பாஜகவின் பலம் 102 ஆக உள்ளது. ஆனால் சட்டமேலவை உறுப்பினர்களை பெங்களூரில் வசிப்பவர்களாகக் கூறி, வாக்காளர் பட்டியிலில் இணைத்து, அதன் மூலம் முறைகேடான முறையில் மேயர் பதவியைப் பிடிக்க காங்கிரஸ், மஜத முயற்சி மேற்கொண்டுள்ளது. அவர்களின் நடவடிக்கையை பாஜக உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் காங்கிரஸ், மஜதவுக்குத் தக்கப் பாடம் புகட்டியுள்ளனர் என்றார் அவர்.