தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முதல்வராகும் எண்ணம் இல்லை என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
இதுகுறித்து மைசூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ராஜிநாமா செய்துள்ள காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் பெரும்பாலானோர் எனக்கு நெருக்கமானவர்களாக இருந்தாலும், இதில் எனக்கு சம்பந்தமில்லை. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முதல்வராகும் எண்ணம் எனக்கில்லை.
அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தால், அப்போது முதல்வராவது குறித்து யோசிக்கலாம். அதிகாரத்துக்காக சகோதரர்கள், குடும்ப உறுப்பினர்களிடையே மோதல், கருத்து வேறுபாடு இருக்கும்போது, ராஜிநாமா செய்துள்ள எம்எல்ஏக்கள் எனக்கு நெருக்கமானவர்கள் என்பதால், அதற்கு நான்தான் காரணம் என்று கூற முடியாது. ஒருசில எம்எல்ஏக்களுக்கு அமைச்சர்களுடன் மோதல் உள்ளது. ஒருசிலருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லையே என்ற வேதனை உள்ளது. அண்மையில் நடந்துவரும் அரசியல் நிகழ்வுகளில் யார் பெரியவர் என்ற மோதலும் எம்எல்ஏக்களின் ராஜிநாமாவுக்கு காரணமாக உள்ளது.
அரசியல் நிகழ்வுகள் எனக்கு வருத்தத்தை அளித்துள்ளது. கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க அதிருப்தி எம்எல்ஏக்களை பாஜக ஆதரிப்பது சரியல்ல. கடந்த 2 நாள்களாக நடைபெற்றுவரும் அரசியல் நிகழ்வுகளைக் கவனித்தால், அரசைக் கவிழ்க்க பாஜகவின் மூத்த தலைவர்கள் பலர் நேரிடையாக ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கட்சி மேலிடம் வழிகாட்டுவது கடினமானதாகும்
என்றார்.