பெங்களூரில் ஜூலை 15-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தனியார் நிறுவனங்கள் கூட்டாக பெங்களூரு, டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் சாலையில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் ஜூலை 15-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சாரா, நிதி, ஆட்டோமொபைல், உற்பத்தி, விருந்தோம்பல், மெக்கானிக்கல் துறைகளைச் சார்ந்த 25-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. முகாமில்
5 ஆயிரம் பேருக்கு மேலான வேலைதேடுவோர் பங்கேற்கும் வாய்ப்புள்ளது. இதில் ஆண்கள், பெண்கள் கலந்துகொள்ளலாம்.
வேலைவாய்ப்பு முகாமில் எழுத்தறிவில்லாதவர்கள், பாதியில் பள்ளி படிப்பை இழந்தவர்கள், எஸ்எஸ்எல்சி, பியூசி, ஐடிஐ, பட்டயம் படித்தோர், இளநிலை, முதுநிலை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன.
18-30 வயதுக்குட்பட்ட புதியவர்கள் முதல் ஓராண்டு வேலை அனுபவம் கொண்டவர்கள் பங்கேற்கலாம். வேலை தேடிவருவோர் தன்விவரக் குறிப்பு 6 படிகள், கடவுச்சீட்டு அளவு புகைப்படம் 6 படிகள், அசல் மற்றும் நகல் கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு போன்ற அடையாள அட்டைகளின் நகல்களைக் கொண்டுவர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 080-22289668, 22261184, 22374582, 22268846, 22259351 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.