மஜத தலைவர்களைச் சந்தித்ததற்காக பாஜகவின் கர்நாடக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவை மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவருமான அமித் ஷா தொலைபேசி வழியாகக் கண்டித்ததாக கூறப்படுவதில் உண்மையில்லை என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் என்.ரவிக்குமார் தெரிவித்தார்.
இது குறித்து பெங்களூரில் சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சில நாட்களுக்கு முன்பு மஜத தலைவரை (அமைச்சர் சா.ரா.மகேஷ்) சந்தித்ததற்காக, பாஜக தேசிய பொதுச் செயலாளரும், கர்நாடக மேலிடப் பொறுப்பாளருமான முரளிதர் ராவை கட்சியின் மூத்த தலைவர் அமித்ஷா தொலைபேசியில் அழைத்து கண்டித்தார் என்று சில ஊடகங்களில் தகவல் வெளியானது . இது அடிப்படையற்ற, தீய எண்ணம் கொண்ட, உண்மைக்கு மாறான தகவலாகும். இந்த செய்தி பொய்யானது மட்டுமல்ல, தீய நோக்கம்
கொண்டதாகும்.
தற்போதைய சூழலில் குட்டையைக் குழப்பும் நோக்கத்தோடு, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான சில உள்நோக்கம் கொண்ட ஊடகவியலாளர்கள் இது போன்ற பொய்யான செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். ஊடக நெறிகள், இயற்கை நீதி, தொழில் நேர்மை ஆகியவற்றை காற்றில் பறக்கவிட்டு, உள்நோக்கம் கொண்ட ஊடகவியலாளர்களின் முயற்சியால் தீயநோக்கம் கொண்ட ஊடகவியல் செயல்படுத்தப்பட்டுள்ளது. உறுதிப்படுத்தப்படாத, சரிபார்த்துக்கொள்ளாத, நம்பகத்தன்மையற்ற எந்த செய்தியும் மதிப்பில்லாததாகும். இது போன்ற செய்திகளை ஒருபக்கம் சாதகமான, குப்பையில் கொட்டவேண்டியதாகவே கருதுகிறேன்.
இது காங்கிரஸ் கட்சியின் தூண்டுதலின்பேரில் நடந்துள்ளது. இதுபோன்ற செய்திகளால் உள்நோக்கம் கொண்டோரின் எண்ணம் ஈடேறாது. இது போன்ற தொடர் செய்திகளில் ஊடக நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை.
தேசியத் தலைமை முதல் அடிமட்டத் தொண்டர் வரை பாஜக ஒன்றுபட்டுள்ளது. தேசிய மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரை கட்சியின் அனைத்துவகையான அமைப்புகளிலும் ஒருமித்தக் கருத்து காணப்படுகிறது. எனவே, கட்சி ஒன்றுபட்டுள்ளது, ஒருங்கிணைந்துள்ளது. எனவே, அமித் ஷா மற்றும் முரளிதர் ராவ் தொடர்பாக வெளியான செய்திகள் முழுமையான கண்டனத்துக்கு உள்பட்டதாகும் என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.