விதான செளதாவின் 2 கி.மீ சுற்றளவில் ஜூலை 15-ஆம் தேதி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகர காவல் ஆணையர் ஆலோக்குமார் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை: பெங்களூரு விதான செளதாவில் உள்ள சட்டப்பேரவையில் ஜூலை 12-ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற அரசியல் மாற்றங்களால் விதான செளதா வளாகத்தில் தர்னா உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெறக்கூடும். இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்படலாம் என உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு ஜூலை 15-ஆம் தேதி காலை 6 மணி முதல் 20-ஆம் தேதி இரவு 12 மணி வரை விதான செளதாவைச் சுற்றியுள்ள 2 கி.மீ பரப்பளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவின் போது அப் பகுதியில் போராட்டம், ஊர்வலம், தர்னா நடத்துவதோ கூடாது. மேலும் ஆயுதங்கள், வெடி பொருள்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்தெரிவித்துள்ளார்.