கோலார் தங்கவயல் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவரை பணியிடை நீக்கம் செய்ததைக் கண்டித்து மருத்துவர்கள், ஊழியர்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோலார் தங்கவயல் அரசு மருத்துவமனையில் பல ஆண்டுகளாக போதிய மருத்துவர் இல்லாமல், நோயாளிகள் உரிய சிகிச்சை பெற முடியாமல் உயிரிழப்பதாக புகார்கள் இருந்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் படுக்கையில் இருந்து கீழே விழுந்து மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து, அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு வந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காததால், வயிற்றிலேயே குழந்தை இறந்து விட்டது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக அத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினார். அதே போல் தேசிய மகளிர் ஆணையமும் மருத்துவமனைக்கு வந்து ஆய்வு செய்து சென்றது. இந்த நிலையில், வியாழக்கிழமை தலைமை மருத்துவர் சிவகுமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த உத்தரவை கண்டித்தும், திரும்பப்பெறக் கோரியும், வெள்ளிக்கிழமை காலை மருத்துவர்கள், செவிலியர், ஊழியர்கள் அனைவரும் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஆதரித்து தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளும் தர்னாவில் கலந்து கொண்டனர்.
தகவல் அறிந்து மாவட்ட பஞ்சாயத்து தலைமை அதிகாரி ஜெகதீசன் அங்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வழங்கிய கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்டார். இதனையடுத்து, அவர்கள் போராட்டத்தைக் கை விட்டனர். பிற்பகல் வரை நீடித்த தர்னா போராட்டத்தின் காரணமாக சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.