சென்னப்பட்டணா அருகே தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
ராம்நகர் மாவட்டம், சென்னப்பட்டணா அருகே உள்ள சதரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகேஷ் (30). இவரது மனைவி கெளசல்யா (22). கடந்த 4 நாள்களுக்கு முன்பு அதே கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜ் என்பவருடன் கெளசல்யா சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அங்கு, கெளசல்யாவுடன் தான் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை லோகேஷிக்கு, தியாகராஜ் அனுப்பியுள்ளார்.
இதனால் லோகேஷ் மனவேதனையடைந்துள்ளார். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கெளசல்யா தனது வீட்டிற்கு திரும்பி வந்தார். கெளசல்யா ஓடிபோனதாக அக்கிராமத்தில் ஒருசிலர் பேசி வந்ததால், அவமானமடைந்த லோகேஷ், கெளசல்யா ஆகியோர் தங்களது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் தியாகராஜுன் வீடு, 2 கார்கள், டிராக்டருக்கு தீ வைத்தனர். இதில் வீடு, 2 கார்கள், டிராக்டர் தீக்கிரையானது. இதுகுறித்து அக்கூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.