அரசு அதிகாரிகள், பல்கலைக்கழகப் பேராசிரியர் வீடு, அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் படையினர் நடத்திய சோதனையில் பல கோடி மதிப்பிலான சொத்துகள், ஆவணங்களை பறிமுதல் செய்யப்பட்டன.
வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகள் குவித்துள்ளதாகக் கிடைத்த தகவலின் பேரில் தார்வாட், வட கர்நாடகம், தென் கன்னடம் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு அதிகாரிகள், பேராசிரியரின் வீடுகள், அலுவலகங்களில் புதன்கிழமை சோதனை நடத்தப்பட்டது.
தார்வாட் மாவட்டத்தில் உள்ள கர்நாடக பல்கலைக்கழகத்தின் வேதியல்துறை பேராசிரியர் கல்லப்பா எம்.ஹொசமணி, வட கர்நாடக ஜோய்டாவில் பொதுப்பணித் துறை பொறியாளராகப் பணியாற்றும் உதய் பி.சப்பி, தென்கன்னட மாவட்டம், மங்களூரில் அரசு பொறியாளராகப் பணியாற்றும் மகாதேவப்பா ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் நடத்திய சோதனையில் பல கோடி மதிப்பிலான சொத்துகள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் அனைவர் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.