கர்நாடகத்தில் கூட்டணி அரசுக்கு ஆபத்தில்லை என்று துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
பெங்களூரு விதான செளதாவில் புதன்கிழமை மாநகர ஆணையர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட பஞ்சாயத்து அதிகாரிகளுடனான 2 நாள் மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசியது:
கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி நிலைக்குமா, நிலைக்காதா என்ற மனநிலையில் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். ஆட்சி நீடிப்பது குறித்து அதிகாரிகள் கவலைப்படத்தேவையில்லை.
யார் ஆட்சியிலிருந்தாலும், தங்கள் பணிகளை அதிகாரிகள் செய்வதில் தவறக்கூடாது. ஆட்சி நீடிப்பது குறித்து ஆட்சியில் உள்ளவர்கள் பார்த்துக் கொள்கிறோம். கர்நாடகத்தில் கூட்டணி அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. கூட்டணி அரசு பொறுப்பேற்றவுடன், ஊழலற்ற சிறப்பான ஆட்சியை வழங்க வேண்டும் என்று நானும், முதல்வர் குமாரசாமியும் உறுதிப்பூண்டு பணியாற்றி வருகிறோம்.
அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலால் நடத்தை விதிமுறைகளை பின்பற்ற நேரிட்டது. இதனால் வளர்ச்சிப் பணிகள் எதுவும் செய்யமுடியாமல் போனது. தற்போது தேர்தல் முடிந்துள்ளதால், வளர்ச்சிப்பணிகள், வறட்சி நிவாரணப் பணிகளை அதிகாரிகள் விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்றார்.