கர்நாடகத்தில் வணிக வங்கிகளில் ஒரே தவணையில் பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்ய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ், மஜத கூட்டணி அரசு பதவியேற்றதும் கூட்டுறவு வங்கி உள்ளிட்ட வணிக வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி, 4 தவணைகளாக வங்கிகளுக்கு கடன் தள்ளுபடிக்கான தொகையை அரசு வழங்க முடிவு செய்தது. இந்த நிலையில், ஓரிரு வங்கிகள் பயிர்க்கடனுக்குச் செலுத்திய நிதியை, மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பியது. இது மாநில அளவில் விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, வணிக வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 7.49 லட்சம் விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி முதல்கட்டமாக அந்த வங்கிகளுக்கு ரூ. 3,929 கோடியை மாநில அரசு அனுப்பியது. ஆனால், கடன் தொகையை தவணை முறையில் அல்லாமல் முழுமையாக வழங்குமாறு கூறி, சில வங்கிகள் அரசு வழங்கிய நிதியை மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பின.
இதையடுத்து, வணிக வங்கிகளில் ஒரே தவணையில் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல்வர் குமாரசாமி தலைமையில் அரசு அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்துக்குப் பிறகு புதன்கிழமை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவால் வணிக வங்கிகளில் பயிர்க்கடன் வாங்கியுள்ள 7.49 லட்சம் விவசாயிகள் பயனடைய உள்ளனர்.
விவசாயிகளின் பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்வதில் ஒரு சில வங்கிகள் பிரச்னை செய்வதாக முதல்வர் குமாரசாமி ஏற்கெனவே அதிருப்தி தெரிவித்திருந்தார்.