தனியார் ஆபரணமாளிகை மோசடி வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் அமைச்சர் ஜமீர் அகமதுகான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூரு ஆனந்தராவ் சதுக்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் துணை முதல்வர் ஆர்.அசோக் பேசியது: -
சிவாஜி நகர் தொகுதியில் உள்ள தனியார் ஆபரண மாளிகையின் உரிமையாளர் பண மோசடி செய்து விட்டு தலைமறைவாகியுள்ளார். அவர் மாநகர காவல் ஆணையருக்கு அனுப்பி வைத்துள்ள ஒலிப்பேழையில், சில அரசியல்வாதிகளின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார். அதில் அமைச்சர் ஜமீர் அகமதுகானுக்கும் தொடர்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மோசடி வழக்கில் ஜமீர் அகமதுகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்புப் புலனாய்வுப் படை விசாரித்தால், இந்த வழக்கில் தவறு செய்தவர்கள் தப்பிக்க வாய்ப்புள்ளது. ஆகவே, இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.
ஜிந்தால் நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்கும் முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும். அதுவரை பாஜக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் என்றார் அவர்.
பாஜக மாநிலப் பொதுச்செயலர் ரவிக்குமார், தென்பெங்களூரு மக்களவைத் தொகுதி உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா, விஜயேந்திரா, மாநகராட்சி எதிர்க்கட்சித்தலைவர் பத்மநாப ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.