மங்களூரு அருகே தொக்கொட்டு பகுதியில் புதிய மேம்பாலம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
வட கேரளத்தின் நகரங்களான கண்ணணூர், பையனூர், காஞ்சன்காடு, காசர்க்கோடு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் அவசர கால மருத்துவ உதவிக்கு அருகிலுள்ள கர்நாடகத்தில் உள்ள மங்களூரு மருத்துவமனைகளையே நம்பியுள்ளனர்.
ரயில் வசதிகள் நிறைய இருந்தாலும் அவசரக் காலங்களில் ஆம்புலன்ஸ்களில் நோயாளிகளை அழைத்துச் செல்ல நேரிடுகிறது.
இவ்வாறு செல்லும்போது வழியில் தொக்கொட்டு சந்திப்பு பகுதியில் சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நோயாளிகள் பாதிக்கப்படுவது வாடிக்கையாக இருந்து வந்தது.
இதையடுத்து, இந்தப் பகுதியில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு தேசிய நெடுஞ்சாலைதுறையானது தனியார் வசம் பாலம் கட்டுவதற்கான பணியை வழங்கியது. கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த மேம்பாலப் பணி அண்மையில் நிறைவடைந்தது.
இதைத் தொடர்ந்து, தொக்கொட்டு பகுதியில் அமைக்கப்பட்ட புதிய மேம்பாலத்தை தென்கன்னட மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினர் நளின்குமார் கட்டீல் வியாழக்கிழமை திறந்துவைத்தார்.
புதிய மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டதையடுத்து, கர்நாடக, கேரள மாநில எல்லையோரப் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.