மின் கம்பத்தில் மோதிய காரை மீட்கச் சென்ற 3 பேர், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.
மண்டியா மாவட்டத்துக்குள்பட்ட மத்தூர் வட்டத்தில் உள்ள கே.எம்.தொட்டி மணிக்கெரே கிராமத்தில் புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் பெங்களூரில் இருந்து வந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமிருந்த மின் கம்பத்தில் மோதியுள்ளது. இதில், மின் கம்பம் தரையில் சாய்ந்துள்ளது.
விபத்து பார்த்த பொதுமக்கள் காரையும், அதிலிருந்தவர்களை மீட்க ஓடி வந்துள்ளனர்.
இந்த நேரத்தில், கீழே சாய்ந்த மின் கம்பத்தின் கம்பிகளை மிதித்த தேவராஜ் (35), பிரசன்னா (50), பிரதீப் (25) ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த மது, நந்தீஷ் உள்ளிட்ட 8 பேர் சிகிசைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்து 3 பேர் மின்சாரம் பாய்ந்து இறந்ததையடுத்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வந்த மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சைலேந்திரா, மத்தூர் பெஸ்காம் துணைப் பிரிவின் அதிகாரி ராஜேந்திரா உள்ளிட்டோர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தனர்.
இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என தெரிவித்தனர். மேலும், உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசில் வேலை வாய்ப்பு பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக, உடனடியாகக் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்றனர். இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து கே.எம்.தொட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.