அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்கள் ஆங்கிலத்தை கற்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
பெங்களூரு விதான செளதாவில் வெள்ளிக்கிழமை ஆயிரம் அரசு ஆங்கிலப் பயிற்று மொழிப் பள்ளிகளை தொடக்கிவைத்து அவர் பேசியது: தனியார் பள்ளிகளில் கன்னடம், ஆங்கிலம் பயிலும் மாணவர்களுக்கு சர்வதேச அளவில் வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால், அரசுப் பள்ளிகளில் கன்னடம் படித்துவிட்டு, செல்லும் ஏழை மாணவர்கள் ஆங்கில அறிவில் சிறந்து விளங்காமல் போவதால், அவர்கள் தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட இயலவில்லை. இதனைக் கருத்தில் கொண்டு, மாநில அரசு, சுமார் ஆயிரம் அரசு ஆங்கில பயிற்று மொழிப் பள்ளிகளை தொடங்கியுள்ளது.
இதன்மூலம் அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்கள் ஆங்கிலத்தை கற்க முடியும். கன்னடத்துடன் ஆங்கிலத்தை பயிலுவதால் அவர்கள் எதிர்காலத்தில் தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டி போட முடியும். ஆங்கிலம் கற்பிப்பதால், கன்னடத்தை ஒதுக்கியுள்ளோம் எனக் கூறமுடியாது. கர்நாடகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சர்வதேச தரத்துக்கு உயர வேண்டும் என்றால், அவர்களுக்கு ஆங்கில அறிவு அவசியம் என்பதனை உணர வேண்டும்.
ஆங்கிலப் பயிற்று மொழிக்கு கன்னட சங்கங்கள், இலக்கியவாதிகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். கர்நாடகத்தில் வசிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாநில அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. நம்மில் ஆங்கிலம் தவிர்க்க முடியாத மொழியாக ஆகியுள்ளது.
மாணவர்களுக்கு மட்டுமின்றி, ஆசிரியர்களுக்கும் சிறந்த கல்வியை புகட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. முதல்கட்டமாக அரசு ஆங்கிலப் பயிற்று மொழிப் பள்ளிகளில் தலா 30 மாணவர்களை மட்டுமே சேர்க்க முடிவு செய்துள்ளோம். அதிக மாணவர்களை சேர்க்க வேண்டும் என பெற்றோர்கள் வற்புறுத்துவதால், அதுகுறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
கர்நாடகத்தில் ஆங்கிலப் பயிற்று மொழிப்பள்ளிகளை நடத்துவது சவாலான பணியாக இருக்கும். என்றாலும் அந்த சவாலை சமாளித்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், கல்வித் துறை ஆணையர் பி.சி.ஜாப்பார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.