மைசூரு ஜெயசாம ராஜேந்திரா விலங்குகள் காட்சி சாலையில் பொதுமக்களுக்கான நுழைவுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் சுற்றுலாவுக்கு சிறந்த இடமாக மைசூரு உள்ளது. அங்குள்ள அரண்மனை, ஜெயசாம ராஜேந்திரா விலங்குகள் காட்சி சாலைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இந்த நிலையில், ஜெயசாம ராஜேந்திரா விலங்குகள் காட்சி சாலையில் பொதுமக்களுக்கான நுழைவுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ. 60, சிறியவர்களுக்கு ரூ. 30 வசூலிக்கப்பட்டு வந்தது. இனி புதிய நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ. 80, சிறியவர்களுக்கு ரூ. 40-ம் வசூலிக்கப்படுகிறது.
இந்த கட்டண உயர்வு ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. பூங்காவில் உள்ள வன விலங்குகளுக்கான பராமரிப்பு செலவு அதிகரித்துள்ளதால், நுழைவுக் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.