வால்மீகி சமுதாயம் உள்ளிட்ட பழங்குடியினருக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்காவிடில் போராட்டம் நடத்தப்படும் என்று அச் சமுதாயத்தைச் சேர்ந்த ராஜனஹள்ளி மடாதிபதி பிரசானந்தா சுவாமிகள் தெரிவித்தார்.
வால்மீகி சமுதாயம் உள்ளிட்ட பழங்குடியினருக்கு 7.5 சதம் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, தாவணகெரே ராஜனஹள்ளி மடத்திலிருந்து பெங்களூருக்கு ராஜனஹள்ளி மடாதிபதி பிரசானந்தா சுவாமிகள் தலைமையில் வால்மீகி சமுதாயத்தினர் நடைபயணம் மேற்கொண்டனர்.
17-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை பெங்களூரில் நடைபயணம் நிறைவு பெற்றது. பின்னர் சுதந்திரப்பூங்காவில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியது: 1991-இல் அப்போதிருந்த பழங்குடியின மக்கள் தொகைக்கு ஏற்ப 3 சதவீதம் இட ஒதுக்கீட்டு செய்யப்பட்டது. தற்போது வால்மீகி உள்ளிட்ட பழங்குடியினரின் மக்கள்தொகை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், மாநில அரசு தொடர்ந்து 3 சதவீத இடஒதுக்கீட்டை மட்டும் வழங்கி வருகிறது.
இதனை 7.5 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எங்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிடில் போராட்டம் தீவிரமடையும். மேலும் பல்வேறு கட்சிகளில் உள்ள எங்கள் வால்மீகி சமுதாயத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்வதாக உறுதி
அளித்துள்ளனர்.
தற்போது உள்ள சூழ்நிலையில் எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.கள் ராஜிநாமா செய்தால், கூட்டணி அரசு கவிழும். எனவே, இதுகுறித்து முதல்வர் குமாரசாமி ஆலோசித்து உரிய முடிவை எடுக்க வேண்டும் என்றார்.
இதைத்தொடர்ந்து முதல்வர் குமாரசாமியை சந்தித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பரிசீலித்த முதல்வர் குமாரசாமி, "அமைச்சரவையில் இதுகுறித்து விவாதித்து, குழு அமைக்கப்படும். அக் குழு இன்னும் 2 மாதத்தில் இடஒதுக்கீடு குறித்த அறிக்கை அளிக்கும். அறிக்கைக்கு பிறகு அமைச்சரவையைக்கூட்டி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
இதையடுத்து கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், அமைச்சர்கள் சதீஷ் ஜார்கிஹோளி, பிரியங்க் கார்கே ஆகியோரைச் சந்தித்து முதல்வர் குமாரசாமியின் உறுதிமொழியை தெரிவித்தனர்.