ஏழைகளுக்கு சேவையாற்ற இளைஞர்கள் ஆர்வமுடன் முன்வர வேண்டும் என்றார் கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா.
பெங்களூரு ஆளுநர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை மாநில சாரண, சாரணியர் இயக்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியது: அண்மைக்காலமாக இளைஞர்கள் பாதைமாறி போதை உள்ளிட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி வருகின்றனர். அவர்கள் தங்கள் கவனத்தை திசைதிருப்பி நாட்டின் வளர்ச்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். ஏழைகளுக்கு சேவை செய்வதில் ஆர்வம் காட்ட வேண்டும்.
இதனை கர்நாடகத்திற்குள் மட்டுமே சுருக்கிக் கொள்ளாமல், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் சேவை செய்ய ஆர்வம் காட்ட வேண்டும். இளைஞர்கள் முயற்சி செய்தால் முடியாது எதுவுமில்லை என்றார்.
உயர்கல்வித் துறை அமைச்சர் ஜி.டி.தேவெ கெளடா பேசியது: மாநில அளவில் சாரண, சாரணியர் இயக்கம் சிறப்பாக சேவையாற்றி வருகிறது. இயக்கத்துக்கு தேவையான அனைத்து வசதிகளை மாநில அரசு செய்து தர தயாராக உள்ளது. மாணவர்கள் கல்வியுடன், விளையாட்டு உள்ளிட்ட மற்ற துறைகளிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மாநில சாரண, சாரணியர் இயக்கத்தின் துணைத் தலைவர் தேஜஸ்வினி அனந்த்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.