கர்நாடகத்தில் ராகுல் காந்தி போட்டியிட சித்தராமையா வேண்டுகோள்

மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தில் இருந்து ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா கேட்டுக் கொண்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தில் இருந்து ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கர்நாடகத்தில் இருந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளனர். இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முடிவுசெய்துள்ளார். 
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னாள் முதல்வர் சித்தராமையா வெள்ளிக்கிழமை தனது சுட்டுரைப்பக்கத்தில்,"இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களை கர்நாடகம் எப்போதும் ஆதரித்து, ஊக்கப்படுத்தி வந்துள்ளது. இந்திரா காந்தி, சோனியாகாந்தி விவகாரத்தில் இது உறுதியாகியுள்ளது. எமது இந்தியாவின் அடுத்த பிரதமரான ராகுல் காந்தி கர்நாடகத்தில் இருந்து போட்டியிட்டு, வளர்ச்சியில் புதிய முன்னுதாரணத்தை உருவாக்கவேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
1978-ஆம் ஆண்டு சிக்மகளூரு தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் போட்டியிட்ட இந்திராகாந்திக்கு அரசியல் மறுவாழ்வு கிடைத்தது. அதேபோல, 1999-இல் பெல்லாரி தொகுதியில் போட்டியிட்ட சோனியா காந்தி,காங்கிரஸ் கட்சியில் தனது தலைமையை பலப்படுத்திக் கொண்டார். ஆனால், இம்முறை சிக்மகளூரு தொகுதியை மஜதவுக்கு காங்கிரஸ் விட்டுக்கொடுத்துள்ளது. ஆனால், பெல்லாரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
அமேதி தவிர, தென்னிந்தியாவில் இருந்து ஒரு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடவேண்டுமென்ற கோரிக்கை காங்கிரஸ் கட்சியில் ஓங்கி வரும்நிலையில், சித்தராமையாவின் கருத்து வெளிப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com