பெங்களூரில் குடிநீர் பிரச்னையை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் மஞ்சுநாத் பிரசாத் தெரிவித்தார்.
பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவகத்தில் வெள்ளிக்கிழமை மேயர் கங்காம்பிகே, துணை மேயர் பத்ரேகெளடா, மாநகராட்சி ஆணையர் மஞ்சுநாத் பிரசாத் தலைமையில் குடிநீர் வடிகால், வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மஞ்சுநாத் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியது: பெங்களூரில் குடிநீர்ப் பிரச்னை அதிகரித்துள்ளது.
இதற்கு மாநகராட்சி உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கே.ஆர்.எஸ் அணை மற்றும் கபினி அணைகளில் தற்போது 25.5 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. இதிலிருந்து அடுத்த 3 மாதங்களுக்கு பெங்களூருக்கு 10 டி.எம்.சி தண்ணீர் கிடைக்க உள்ளது.
பெங்களூரு மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள 110 கிராமங்களுக்கு 1,400 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டியுள்ளது. இதனுடன் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் வடிகால் வாரியத்துக்குச் சொந்தமாக 9,891 ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன.
இதில் 9,273 ஆழ்துளைக் கிணறுகள் செயல்பட்டு வருகின்றன. தனியார்கள் 3.60 லட்சம் ஆழ்துளைக் கிணறுகளை பயன்படுத்தி வருகின்றனர்.
என்றாலும், குடிநீர் தேவை அதிகரித்துள்ளதையடுத்து, பெங்களூரில் 65 குடிநீர் லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், குடிநீர் லாரிகள் தேவைப்பட்டால், அதனை ஒரு வாரத்துக்குள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பேட்டியின் போது ஆளும் கட்சித் தலைவர் அப்துல் வாஜித், எதிர்க்கட்சித் தலைவர் பத்மநாபரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.