மனித உரிமை பாதுகாப்பு மற்றும் சர்வதேச அவசர நடவடிக்கை அமைப்பின் சார்பில் நடைபெற்ற விழாவில் பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரனுக்கு தமிழ்அன்னை விருது வழங்கப்பட்டது.
மனித உரிமை பாதுகாப்பு மற்றும் சர்வதேச அவசர நடவடிக்கை அமைப்பின் சார்பில் பெங்களூரில் அண்மையில் நடந்த உலகமகளிர் தினவிழாவில் பெங்களூரு தமிழ்ச் சங்கத்தலைவர் தி.கோ.தாமோதரனின் தமிழ்ப் பணியை பாராட்டி தமிழ் அன்னை விருது வழங்கப்பட்டது.
பெங்களுரு தமிழ்ச் சங்கத்தில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் மனித உரிமை அமைப்பின் அகில இந்திய தலைவர் டாக்டர் ஏ. ஜோசப் பங்கேற்று விருது வழங்கி கெளரவித்தார். தி.கோ.தாமோதரன், 1964-ஆம் ஆண்டு முதல் பெங்களுரு தமிழ்ச் சங்கத்தில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டு தமிழ்ப் பணியாற்றி வருகிறார்.
பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக நான்கு ஆண்டுகளாக பணியாற்றிய பிறகு, கடந்த இரு ஆண்டுகளாக பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவராக பொறுப்பேற்று சங்கப் பணிகளை சிறப்பாக செய்து வருகிறார். தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப் பள்ளிக்கு அரசு அங்கீகாரம், தமிழ்ச் சங்கத்திற்கு அரசிடமிருந்து 2 ஏக்கர் நிலம் உள்ளிட்டவற்றை வாங்கி கொடுத்தார்.
மேலும் பல்வேறு சமூகப்பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார். அவருக்கு தமிழ் அன்னை விருது வழங்குவதில் மனித உரிமை பாதுகாப்பு அமைப்பு பெருமை கொள்வதாக விருது பட்டயத்தில் அமைப்பின் நிறுவனர் ஏ.ஜோசப் தெரிவித்துள்ளார்.