பொதுமக்களிடம் கண் பசும்படலம் குறித்து விழிப்புணர்வு தேவை என்று கண் மருத்துவர் ரகுநாகராஜ் தெரிவித்தார்.
பெங்களூரு இந்திராநகரில் அகர்வால் கண் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை பசும்படலம் (குளுக்கோமா) பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் பேசியது:
இந்தியாவில் கண் பார்வையிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பசும்படலத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. எனவே, பசும் படலத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் கண் பசும்படலத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.2 கோடியாக உயர்ந்துள்ளது.
2020-ஆம் ஆண்டுக்குள் இது 1.6 கோடியாக உயரும் என்று அஞ்சப்படுகிறது. ஆரம்பக்கட்டத்திலேயே இதற்கு சிகிச்சைப் பெற்றால் கண்கள் பாதிக்கப்படுவதை தடுக்க முடியும். தற்போது உள்ள நவீன தொழில்நுட்பத்தால், கண்களின் ஏற்படும் பாதிப்புகளை ஆரம்பக்கட்டத்திலேயே தடுக்க முடியும். அண்மையில் குண்டு வெடிப்பால் கண்கள் பாதிக்கப்பட்ட ஏமன் நாட்டு பெண்ணுக்கு சிறப்பு சிகிச்சை அளித்ததன் மூலம் மீண்டும் கண்பார்வை கிடைத்துள்ளது. மார்ச் 10-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை கண் பசும்படலம் வாரம் கடைப்பிடிப்பதால், அனைவரும் கண்களை பரிசோதித்துக் கொண்டு பயனடைய வேண்டும் என்றார்.