கர்நாடக மாநிலம், கலபுர்கியில் மார்ச் 18-ஆம் தேதி நடைபெறும் காங்கிரஸ் மாநாட்டில் அக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை மாநில சமூக நலத் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே செய்தியாளர்களிடம் கூறியது:
கர்நாடக மாநிலம், கலபுர்கிக்கு மார்ச் 18-ஆம் தேதி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அன்று காலை 11.30 மணியளவில் நடைபெறும் காங்கிரஸ் ஊழியர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். பின்னர் அங்கிருந்து பெங்களூருக்கு செல்லும் அவர், அங்கு நடைபெறும் இளைஞர்கள் மற்றும் தொழிலதிபர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
அதைத் தொடர்ந்து பாஜகவிலிருந்து விலகிய பலர், காங்கிரஸில் இணைகின்றனர். மாநில செயல் தலைவர் ஈஸ்வர்கண்ட்ரே கலந்து கொள்கிறார். கலபுர்கி மாநாட்டில் கலந்து கொள்ளும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். முதல்வர் குமாரசாமியும் கலபுர்கி மக்களவைத் தொகுதியில் 2 முறை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார் என்றார்.