முன்னாள் பிரதமர் தேவெ கௌடாவின் நண்பரும், மஜத தேசிய பொதுச் செயலரான டேனிஷ் அலி அந்தக் கட்சியில் இருந்து விலகி, பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெüவில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்தத் தலைவர் சதீஷ்சந்திரமிஸ்ரா முன்னிலையில், டேனிஷ் அலி இணைந்தார்.
இதுகுறித்து டேனிஷ் அலி கூறியது:-
உத்தரப்பிரதேசத்தில் மஜதவுக்கு கட்டமைப்பு இல்லை. எனது சொந்த மாநிலத்தில், மஜத வேட்பாளராக நிற்க முடியாததாலும், பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுகிறேன். அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. வலுவான தலைமையை பயன்படுத்தி அந்த முயற்சியை முறியடிக்க வேண்டியுள்ளது. அதற்காகவே மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்துள்ளேன். கட்சியின் தலைவர் மாயாவதி கூறும் பணிகளை செவ்வனே செய்வேன் என்றார்.
இதுகுறித்து தனது சுட்டுரையில் விளக்கமளித்த கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியிருப்பதாவது, டேனிஷ் அலி, எனது, மஜத தேசியத் தலைவர் எச்.டி.தேவெ கெüடாவின் சம்மதத்துடன் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்துள்ளார். இது இரு கட்சிகளுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்டுள்ள தூய்மையான அரசியல் ஏற்பாடாகும். மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்ற மஜதவும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டாக எடுத்த சிறந்த அரசியல் முடிவாகும் என தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினரான டேனிஷ் அலி, 1993-ஆம் ஆண்டு முதல் மஜதவில் தீவிரமாக இருந்து வந்தார். மஜத- காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் முக்கியப் பங்கு மேற்கொண்டதில் முக்கிய பங்காற்றியவர்.