கர்நாடகத்தில் தொழிற்கல்விக்கான பொது நுழைவுத் தேர்வில் 88.74 சத மாணவர்கள் பங்கேற்றனர்.
2019-20-ஆம் கல்வியாண்டில் பொறியியல், பி.எஸ்சி(விவசாயம், கால்நடை, பட்டுவளர்ப்பு, காடுவளர்ப்பு, தோட்டக்கலை), பி.ஃபார்ம், டி.ஃபார்ம் ஆகிய படிப்புகளை வழங்கும் கல்லூரிகளில் சேருவதற்காக மாணவர்களை தெரிவுசெய்வதற்கு கர்நாடக தேர்வு ஆணையம் கர்நாடக பொதுநுழைவுத் தேர்வுகளை ஏப்.29,30 ஆகிய தேதிகளில் நடத்தியது. இதற்காக மாநிலம் முழுவதும் 431 மையங்கள்
அமைக்கப்பட்டிருந்தன.
இந்த தேர்வை எழுத மாநிலம் முழுவதும் 1,94,311 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். இதில் ஏப்.29-ஆம் தேதி நடந்த உயிரியல் பாடத்தேர்வை 79.90சதவீத மாணவர்களும், கணிதப்பாடத் தேர்வை 91.92 சதவீத மாணவர்களும், ஏப்.30-ஆம் தேதி நடந்த இயற்பியல் பாடத் தேர்வை 92.27சதவீத மாணவர்களும், வேதியியல் பாடத் தேர்வை 90.88 சதவீத மாணவர்களும் எழுதினர்.
நான்கு பாடங்களுக்கான தேர்வுகளும் எவ்வித தொந்தரவும் இல்லாமல் நடந்து முடிந்தது. இம்முறையும் வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் வழங்கப்பட்டிருந்தன. வெளிமாநில மற்றும் எல்லைப்பகுதி கன்னடர்களுக்காக புதன்கிழமை கன்னடமொழி பாடங்களுக்கான தேர்வு நடந்தது என்று ஆணையம் தெரிவித்துள்ளது.