மாநிலத்தில் கன்னடத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
பெங்களூரு தனிசந்திரா பிரதான சாலை ஆர்.கே.ஹெக்டே நகரில் சாய் கல்யாண் சுப்ரியா குழுமத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மாநிலத்தில் கன்னடத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். வேலைவாய்ப்பிலும் கன்னட மொழி பயின்றவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பளிக்க வேண்டும். அதற்காக மற்ற மொழிகளைக் கற்பதை தவறு என்று கூற மாட்டோம். கன்னடத்துக்கு இழுக்கு ஏற்படும் என்றாலும், அதை ஒரு போதும் சகித்துக்கொள்ள மாட்டோம். கன்னட மொழிக்கு பாதிப்பு என்றால், அனைவரும் ஒற்றுமையாகப் போராட முன் வர வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என மக்கள் போராடி வருகின்றனர். அதற்கு எங்களின் ஆதரவு எப்போதும் உள்ளது என்றார்.
மேலும், பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் மக்கள் அதிக அளவில் குடியேறி வருகின்றனர். அதனால் அவர்களுக்கு குறைந்த விலையில் சிறந்த வசதிகள் கொண்டு குடியிருப்புகளின் தேவை உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, சாய் கல்யாண் சுப்ரியா குழுமத்தினர் குறைந்த விலையில் வீடுகளைக் கட்டித் தருவது வரவேற்கத்தக்கது. பெங்களூரில் ரியல் எஸ்டேட் வர்த்தகம் வளர்ச்சி அடைந்து வருகிறது என்றார் அவர்.
நிகழ்ச்சியில், அமைச்சர் கிருஷ்ண பைரே கெளடா, சாய் கல்யாண் சுப்ரியா குழுமத்தின் தலைவர் வேணுகோபால், மேலாண் இயக்குநர் சுனில், மாமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீகாந்த், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.