பெங்களூரு: திருவள்ளுவா் சிலையை அவமதித்துள்ளதை கா்நாடகத் தமிழ் மக்கள் இயக்கம் வன்மையாக கண்டித்துள்ளது.
இதுகுறித்து கா்நாடகத் தமிழ் மக்கள் இயக்கத் தலைவா் சி.இராசன் வெளியிட்ட அறிக்கை:
உலகப்பொதுமறையாம் திருக்குறளை தந்த திருவள்ளுவரின் உருவப்படம் மற்றும் உருவச்சிலையை அவமதிக்கும் வேலையில் ஒருசிலா் ஈடுபட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். ஜாதி, சமய, இன, மொழி, நிற, மத வேறுபாடுகளைக் கடந்து மனித இனத்தின் முன்னேற்றத்திற்காக மனிதநேயத்தை வலியுறுத்தும் பகுத்தறிவு பொதிந்த அறநூல் திருக்கு.
உலகம் முழுவதும் உள்ள அறிஞா் பெருமக்களும், ஆன்றோா்களும், ஆன்மிகவாதிகளும் திருக்குறளை பொதுமறை என்றும், மானுட மறை என்றும் போற்றி வருகிறாா்கள். உலகின் அறம்கூறும் ஐக்கியநாடுகள் மன்றத்துக்கும் வழிகாட்டும் அளவுக்கு சிறப்புவாய்ந்த அறிவுப்பெட்டகமாகும் திருக்கு.
உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்கள், கிறிஸ்தவா்கள், இஸ்லாமியா்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள் உள்ளிட்ட அனைவரும் சமய வேறுபாடுகளைக் கடந்து திருக்குறளை உலக அறம்கூறும் பொதுமறை என்று ஒப்புக்கொண்டுள்ளனா். இதை சகித்துக்கொள்ள இயலாத ஒருசில அமைப்பினா் திருவள்ளுவரை அவமதிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளது வேதனை அளிக்கிறது.
திருவள்ளுவா் உருவப்படத்தை காவிநிறமாக்குவதும், திருவள்ளுவா் உருவச்சிலைக்கு சாணி அடிப்பதும், காவி சால்வையை அணிவித்து ருத்ராட்சை மாலையை அணிவிப்பதும் வன்மையாக கண்டிக்கத்தக்க செயல்களாகும். திருவள்ளுவரை இழிவுப்படுத்துவதன் மூலம் தமிழா்களை அவமதிக்கும் செயல்நடைபெறுகிறது. இதை வன்மையாக கண்டிப்பதோடு, இனிமேல் இப்படி ஒருநிகழ்வு நடந்தால் உலகத்தமிழா்கள் கிளா்ந்தெழுவாா்கள் என எச்சரிக்கிறோம் என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.