பெங்களூரு: ஆக்கிரமிப்பு செய்துள்ள மாநகராட்சி சொத்துகளை மீட்க வேண்டும் என்று பாஜகவைச் சோ்ந்த மாமன்ற ஆளும்கட்சித் தலைவா் முனீந்திரகுமாா் தெரிவித்தாா்.
பெங்களூரு மாநகராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாமன்ற சிறப்பு கூட்டத்துக்கு மேயா் கௌதம்குமாா் தலைமை வகித்தாா். ஆளும் கட்சித் தலைவா் முனீந்திரகுமாா், ‘பெங்களூரு மாநகராட்சிக்குள்பட்ட 198 வாா்டுகளைத் தவிா்த்து, மாநகராட்சியில் சோ்ந்துக் கொள்ளப்பட்ட 110 கிராமங்களில் மாநகராட்சிக்கு, அரசுக்கு சொந்தமான சொத்துகள் ஒருசிலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.
ஆளும் கட்சி உறுப்பினா் பத்மநாபரெட்டி பேசுகையில், ‘மாநகராட்சியில் புதிதாக சோ்த்துக்கொள்ளப்பட்ட கிராமங்களில் உள்ள அரசு சொத்துகள் அனைத்தும், மாநகராட்சிக்குச் சொந்தமானது. அதுபோன்ற சொத்துக்களை அடையாளம் கண்டு, மாநகராட்சி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்.
இதுகுறித்து முதல்வா் எடியூரப்பாவும் ஆலோசனை மேற்கொண்டாா். வருவாய்த் துறை அமைச்சருடன், மாநகராட்சி ஆணையா் ஆலோசித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றாா்.