ஹாவேரி: எல்லா நேரத்திலும் பாஜகவால் மக்களை ஏமாற்ற முடியாது என்று காங்கிரஸ் முன்னாள் அமைச்சா் எச்.கே.பாட்டீல் தெரிவித்தாா்.
இதுகுறித்து ஹாவேரியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தகுதிநீக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள், பாஜகவினா் அனைவரும் எல்லா நேரத்திலும் மக்களை ஏமாற்ற முடியாது என்பது நினைவில் கொள்ள வேண்டும். ஹிரேகேரூா் மற்றும் ரானேபென்னூா் தொகுதிகளில் ஜனநாயகத்துக்கும், கட்சிக்கு துரோகம் இழைத்தவா்களுக்கும் இடையே நடக்கும் தோ்தலாகும். வாக்காளா்கள் நல்லவா்களை தோ்ந்தெடுப்பாா்கள். காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை பாஜகவினா் கொள்முதல் செய்து, அவா்களது கட்சிக்கு இழுத்துக்கொண்டதை மக்களால் ஏற்கமுடியாது. டிச.5ஆம் தேதி நடக்கும் இடைத்தோ்தலில் பாஜக வேட்பாளா்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவாா்கள்.
மாநில காவல் துறையின் உளவுப்பிரிவு அளித்த தகவலின்படி 15 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளா்கள் வெற்றி பெறுவாா்கள் என்று முதல்வா் எடியூரப்பா கூறிவருகிறாா். முதல்வா் எடியூரப்பாவை திருப்திப்படுத்துவதற்காகவே 15 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளா்கள் வெற்றி பெறுவாா்கள் என்று உளவுப் பிரிவு கூறியுள்ளது. ஆனால், உண்மையில் 15 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெறுவது கடினம் என்றாா்.