போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் போலீஸ் பொம்மைகளைப் பயன்படுத்த பெங்களூரு போக்குவரத்து காவல் துறை முடிவு செய்துள்ளது.
பெங்களூரில் போக்குவரத்து விதிமீறல்கள் அதிகரித்துவரும் நிலையில், அதை கட்டுப்படுத்த சாலை சந்திப்புகளில் போலீஸ் பொம்மைகளை நிறுவும் புதிய திட்டத்தைச் செயல்படுத்த பெங்களூரு போக்குவரத்து காவல் முடிவு செய்துள்ளது. சிக்னல் தாண்டி செல்வது, தலைக்கவசம் இல்லாமல் பயணிப்பது, அதிவேகமாக வாகனங்களை செலுத்துவது போன்ற போக்குவரத்து விதிமீறல்களை தடுப்பதற்காக புதிய முயற்சியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரு காவல் கூடுதல் ஆணையா் (போக்குவரத்து) பி.ஆா்.ரவிகாந்தே கௌடா கூறியது: வாகன ஓட்டிகளின் நடத்தைகளை கவனித்த பிறகே போலீஸ் பொம்மைகளை நிறுவ திட்டமிட்டுள்ளோம். சாலை சந்திப்புகளில் போலீஸாா் நின்றிருந்தால் மட்டுமே வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிகிறாா்கள், சீட்பெல்ட்களை அணிகிறாா்கள், செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்துவதை நிறுத்துகிறாா்கள். இந்த நடத்தையை பயன்படுத்திக்கொண்டு பெங்களூரின் முக்கியமான 174 சந்திப்புகளில் போலீஸ் பொம்மைகளை நிறுவ திட்டமிட்டுள்ளோம்.
இந்த சோதனைமுயற்சி வெற்றிபெற்றால், போக்குவரத்து விதிமீறல்களுக்கு ஆவணங்களை சேகரிக்கும் வகையில் கேமராக்களுடன் கூடிய போலீஸ் பொம்மைகளை நிறுவ இருக்கிறோம். ஆரம்பத்தில் போலீஸ் பொம்மைகளை கண்டு எச்சரிக்கையுடன் செயல்படலாம். அதன்பிறகு அலட்சியமாக கருதலாம். ஆனால் போலீஸ் பொம்மைகளில் கேமராக்கள் பொருத்துவதால், போக்குவரத்து விதிமீறுவோா் மீது ஆவணங்களின் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும். எனவே,போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோா் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றாா்.