கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைதின் பின்னணியில் முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளார் என்று பாஜக மாநிலத் தலைவர் நளின்குமார் கட்டீல் தெரிவித்தார்.
பாகல்கோட்டையில் நளின்குமார் கட்டீல் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
அமலாக்க இயக்குநரக அதிகாரிகளால் விசாரிக்கப்பட்ட டி.கே.சிவக்குமார், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காததால், அவரை கைது செய்துள்ளனர். இருந்தாலும் அவரது கைது பின்னணியில் சித்தராமையா உள்ளார்.
காங்கிரஸில் டி.கே.சிவக்குமாரின் வளர்ச்சி அபரீதமாக உள்ளதால், தனது வளர்ச்சி பாதிக்கப்படும் என்ற அச்சத்தால் சித்தராமையாக்கு காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதனை அவரால் சகித்து கொள்ள முடியவில்லை. இதன் வெளிப்பாடுதான் டி.கே.சிவக்குமாரின் கைது நடவடிக்கை. இதனை மக்கள் உணர்ந்துள்ளனர். ஆனால் டி.கே.சிவக்குமாரின் கைதின் பிண்ணனியில் பாஜக உள்ளதாக காங்கிரஸார், மஜத உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டுவதில் உண்மையில்லை.
கர்நாடக அரசின் கீழ் உள்ள எந்த அமைப்புகளும் டி.கே.சிவக்குமாரை கைது செய்யவில்லை. 2017 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சி மாநிலத்தில் இருந்தப்போது, சிவக்குமாரின் இல்லம் அலுவலகத்தின் மீது வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாநிலத்தின் முதல்வராக சித்தராமையா இருந்தார். அன்றைய முதல்வர் சித்தராமையா தலையிட்டிருந்தால், சிவக்குமாரின் இல்லம், அலுவலகத்தின் மீது நடைபெற்ற சோதனையை தவிர்த்திருக்கலாம். ஆனால் அவர் அதனை தடுக்காமல் விட்டது ஏன்? என்றார் நளின்குமார் கட்டீல்.