போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 30 நாள்களில் ரூ. 10.67 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரு போக்குவரத்து கூடுதல் ஆணையா் ரவிகாந்த் கௌடா புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: பெங்களூரில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்வதோடு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி செப். 6 ஆம் தேதி முதல் அக். 6 ஆம் தேதி வரை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 11.93 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அபராதமாக ரூ. 10.67 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பா் மாதம் வரை விதிமுறைகளை மீறியதாக 65.46 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூ. 53.92 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. அபராதம் வசூல் செய்வது போலீஸாரின் நோக்கமல்ல. பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறாமல், விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றாா்.