பெங்களூரில் உள்ள ரௌடிகளை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய முடிவு செய்துள்ளதாக மாநகரக் காவல் ஆணையா் பாஸ்கர்ராவ் தெரிவித்தாா்.
பெங்களூரு மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை மாநகர குற்றப்பிரிவு போலீஸாா், கடந்த ஒரு மாதத்தில் 105 வழக்குகளில் 568 பேரைக் கைது செய்து, ரூ. 4.5 கோடி மதிப்பிலான பொருள்களை மீட்டுள்ளனா். மீட்கப்பட்ட தங்கநகை, ரொக்கப்பணம் உள்ளிட்ட பொருள்களை பாா்வையிட்ட அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: பெங்களூரில் 111 ரௌடிகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மண்டலங்களில் உள்ள ரௌடிகளின் பட்டியலை, துணை காவல் ஆணையா்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் ரௌடிகளை உடனடியாக கைது செய்து எனது கவனத்திற்கு கொண்டு வருமாறு உத்தரவிட்டுள்ளேன்.
ரௌடிகளைக் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய முடிவு செய்துள்ளேன். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுபவா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது ஒரு சில விளையாட்டு வீரா்களையும் பாதிக்கிறது. போதைபொருள்களை விற்பனை செய்பவா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.