"மாணவர்களின் தொழில்நுட்ப திறனை மேம்படுத்த வேண்டும்'
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாணவர்களின் திறனை மேம்படுத்துவது அவசியம் என்று தேசியக் கல்விக்குழு அறக்கட்டளையின் தலைவர் எம்.கே.பாண்டுரங்க ஷெட்டி தெரிவித்தார்.
பெங்களூரில் புதன்கிழமை ஆர்.வி. திறன் மேம்பாடு பயிற்சி, ஆராய்ச்சி மையத் தொடக்க விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியது: அண்மைக் காலமாக நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. இதற்கு ஏற்ற வகையில் மாணவர்களின் திறனை மேம்படுத்து அவசியம். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, இயந்திரம் மூலம் கற்றல், தானியங்கி மின்னணுவியல் உள்ளிட்ட துறைகளில் மாணவர்களின் திறனை மேம்படுத்த வேண்டும். தொழில்முனைவோர், தொழில்நுட்பத்தினருக்கு தேவையான சுற்றுச்சூழலை வலுப்படுத்த வேண்டும். சர்வதேச அளவில் புதுமையில் மட்டுமின்றி போட்டியில் நிலைத்திருக்க, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தையும், அதற்கேற்ற வேகத்தையும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆர்.வி திறன் மேம்பாடு பயிற்சி, ஆராய்ச்சி மையம் அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் 1 லட்சம் தொழில்முனைவோர், பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநரைகளை மேம்படுத்துவதை இலக்காக கொண்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் ஆர்.வி திறன் மேம்பாடு பயிற்சி, ஆராய்ச்சி மையத் தலைமை நிர்வாகி அதிகாரி வெங்கடேஷ் பிரசாத், மெர்சிடிஸ் பென்ஸ் குழுமத்தின் ஆராய்ச்சி, வளர்ச்சிப் பிரிவு மேலாண் இயக்குநர் மனுசாலே, ஏ.வி.எஸ் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.