பியூசி மாணவர்களுக்கும் மதிய உணவு திட்டத்தை அமல்படுத்த மாநில அரசு யோசித்து வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்தார்.
அதம்ய சேத்தனா அறக்கட்டளை சார்பில் பெங்களூரில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் பாலில் வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்து மாவை சேர்க்கும் விழாவில் பங்கேற்று அவர் பேசியது:
மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் அறிவுக்கூர்மையை மேம்படுத்தும் நோக்கில் அதம்ய சேத்தனா அறக்கட்டளை மற்றும் ஸ்ரீசத்யசாய் அன்னபூர்ணா அறக்கட்டளையும் கூட்டாக இணைந்து வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்து மாவுடன் கூடிய பாலை வழங்க முன்வந்துள்ளன.
அதம்ய சேத்தனா அறக்கட்டளை, அரசின் மதிய உணவு திட்டத்தை திறம்பட செயல்படுத்தி வருகிறது. மதிய உணவு திட்டத்தை பியூசி மாணவர்களுக்கும் விரிவுபடுத்துமாறு அந்த அறக்கட்டளை கேட்டுக் கொள்கிறது. அதுகுறித்து யோசித்து வரும் மாநில அரசு, பியூசி மாணவர்களுக்கும் மதிய உணவு திட்டத்தை அமல்படுத்த ஆர்வமாக உள்ளது. இதுகுறித்து வெகுவிரைவில் முடிவெடுப்போம். அநேகமாக அடுத்த கல்வி ஆண்டுமுதல் அமல்படுத்த விவாதித்து முடிவெடுப்போம்.
கர்நாடகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு போதுமான ஊட்டச்சத்து இல்லாத காரணத்தால் பல்வேறு நோய்களுக்கு ஆட்படுகிறார்கள். இதைத் தடுத்து, ஆரோக்கியமான மாணவர் சமுதாயத்தை உருவாக்கவே ஊட்டச்சத்துடன் கூடிய பாலை அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றார்.
விழாவில் அதம்யசேத்தனா அறக்கட்டளை தலைவர் தேஜஸ்வினி அனந்த்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.