வளர்ச்சிப் பணிகளின் தரத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று மாநகராட்சி ஆணையர் அனில்குமார் தெரிவித்தார்.
பெங்களூரில் புதன்கிழமை மாநகராட்சி ஒப்பந்ததாரர் சங்கம் சார்பில் மாநகராட்சியின் புதிய ஆணையர் அனில்குமாரை வரவேற்றும், முன்னாள் ஆணையர் மஞ்சுநாத் பிரசாத்தை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அவர் பேசியது: பெங்களூரின் வளர்ச்சிக்கு முன்னாள் ஆணையர் மஞ்சுநாத் பிரசாத்தின் பங்களிப்பு அளப்பரியது. அவர் வகுத்த பாதையில் புதிய பெங்களூரை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம். பெங்களூரு பல்வேறு பிரச்னைகளை எதிர்க்கொண்டு வருகிறது. பிரச்னைகளை தீர்க்க அதிகாரிகள் மட்டுமின்றி, ஒப்பந்ததாரர்களும் ஒத்துழைக்க வேண்டும்.
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வளர்ச்சிப் பணிகளின் தரத்தை ஒப்பந்ததாரர்கள் குறைக்கக்கூடாது. வளர்ச்சிப் பணிகளின் தரத்தில் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ள முடியாது என்பதனை அவர்கள் புரிந்து, நடந்து கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் முன்னாள் மாநகராட்சி ஆணையர் மஞ்சுநாத் பிரசாத், மாநகராட்சி ஒப்பந்ததாரர் சங்கத்தின் தலைவர் அம்பிகாபதி, செயலாளர் ரவீந்திரா, கர்நாடக ஒப்பந்ததாரர் சங்கத்தின் தலைவர் கெம்பண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.