கர்நாடகத்தில் 15 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்: அக்.21-இல் வாக்குப் பதிவு

 தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களின் 17 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 15 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


 தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களின் 17 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 15 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு அக். 21-ஆம் தேதி நடைபெறுகிறது.
எச்.டி.குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு மீது அதிருப்தி அடைந்திருந்த 14 காங்கிரஸ், 3 மஜத எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனர். இதனிடையே, 17 எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதங்களை நிராகரித்திருந்த அப்போதைய பேரவைத் தலைவர் கே.ஆர்.ரமேஷ்குமார், கட்சித் தாவல் சட்டத்தின்கீழ் 17 பேரின் எம்.எல்.ஏ.  பதவிகளையும் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார். இதன் விளைவாக, மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. 
224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் 17 எம்.எல்.ஏ.க்களின் பதவியை தகுதிநீக்கம் செய்ததைத் தொடர்ந்து,  பாஜகவின் பலம் 105, காங்கிரஸின் பலம் 66, மஜதவின் பலம் 34-ஆகக் குறைந்தது.  இக் கட்சிகளைத் தவிர,  பகுஜன் சமாஜ் கட்சிக்கும், சுயேச்சைக்கும் தலா ஓர் இடம் உள்ளது. 207 பேர் கொண்ட சட்டப்பேரவையில் 104 இடங்கள் இருந்தால் ஆட்சி அமைக்கலாம் என்பதால்,  எடியூரப்பா தலைமையில் பாஜக அரசு அமைக்கப்பட்டது. 
எதிர்த்து வழக்குஇதனிடையே, தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களும் பேரவைத் தலைவர் பிறப்பித்துள்ள ஆணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை கடந்த 3 மாதங்களாக நடைபெற்றுவரும் நிலையில், அடுத்த விசாரணை செப். 23-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடக்க இருக்கிறது.
இடைத்தேர்தல்இந்நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களின் 17 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 15 தொகுதிகளில் மட்டும் அக். 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்போவதாக இந்திய தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளதால்,  மஸ்கி, ராஜராஜேஸ்வரி நகர் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் தற்போது இடைத்தேர்தல் நடத்தவில்லை.
மஸ்கி, ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிகள் நீங்கலாக,  அத்தானி, காக்வாட், கோகாக், எல்லாபுரா, ஹிரேகேரூர், ரானிபென்னூர், விஜயநகரா, சிக்பளாப்பூர், கே.ஆர்.புரம், யஷ்வந்த்பூர், மகாலட்சுமி லேஅவுட், சிவாஜி நகர், ஹொசபேட்,  கே.ஆர்.பேட், ஹுன்சூர் ஆகிய 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
இத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செப். 23-ஆம் தேதி தொடங்கி,  செப். 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.  அக். 1-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன.  அக். 3-ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
இதைத் தொடர்ந்து, அக். 21-ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு,  அந்த வாக்குகள் அக். 24-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.  15 தொகுதிகள் அமைந்திருக்கும் பெலகாவி,  ஹாவேரி, பெல்லாரி, வட கன்னடம், பெங்களூரு நகரம்,  பெங்களூரு மாநகராட்சி, மண்டியா, மைசூரு, சிக்பளாப்பூர், பெங்களூரு ஊரக மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளன.
இடைத்தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகளிலும் மொத்தம் 37,49,047 வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள்.  இவர்களில் 70,619 பேர் 18 முதல் 19 வயதுக்குள்பட்டவர்கள், 397 பேர் திருநங்கைகள் ஆவர். 
முக்கியத்துவம்224 பேர் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு 113 இடங்கள் தேவைப்படுகின்றன. சட்டப்பேரவையில் தற்போது பாஜகவுக்கு 105 இடங்கள் உள்ளன.  ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ.வும் பாஜகவுக்கு ஆதரவளித்துள்ளார்.  அப்படியானால்,  பாஜகவின் பலம் 106-ஆக உள்ளது. அறுதிப்பெரும்பான்மை பலத்தைப் பெற பாஜகவுக்கு இன்னும் 7 இடங்கள் தேவைப்படுகின்றன.  அதன்படி, 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் குறைந்தது 7, வாய்ப்பிருந்தால் அதிகப்படியான இடங்களில் வெற்றிபெற பாஜக வியூகம் அமைத்துள்ளது.
இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், பாஜகவின் மூத்த தலைவர்களுடன் முதல்வர் எடியூரப்பா சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார். ஒருவேளை குறைந்தது 7 இடங்களைக் கைப்பற்றுவதில் பாஜக தோல்வி அடைந்தால்,  எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு கவிழ்வதைத் தவிர வேறு வழியில்லை.
கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு, கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்த கோபம் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மீது காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளுக்கு உள்ளன.  ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல, இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் கட்சிக்கு துரோகம் செய்த எம்.எல்.ஏ.க்களுக்கு பாடம் புகட்டுவதோடு,  பாஜகவின் ஆட்சியையும் கவிழ்க்கலாம் என்று காங்கிரஸும், மஜதவும் திட்டமிட்டுள்ளன.
கூட்டணி அமைத்து ஆட்சி நடத்திய காங்கிரஸும், மஜதவும் இடைத் தேர்தலில் தனித்தனியாகப் போட்டியிடுகின்றன.  மேலும், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வென்ற தொகுதிகள் என்பதால்,  பாஜகவுக்கு இடம் தராமல் மீண்டும் வெற்றிபெற காங்கிரஸும், மஜதவும் வியூகம் அமைத்துள்ளன. 
முதல்வருடன் சந்திப்புஇதனிடையே,  தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களும் முதல்வர் எடியூரப்பாவை சனிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.  தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால்,  தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
செப். 23-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் வழக்கில் தீர்ப்பு வெளியானால்,  அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அறிவித்துள்ளனர்.
தேர்தலில் போட்டியிட முடியாது
பெங்களூரில் சனிக்கிழமை கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் கூறியது: தேர்தல் வெற்றி குறித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 2 வழக்குகள் நிலுவையில் இருப்பதால்,  மஸ்கி, ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. எஞ்சியுள்ள 15 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடையேதுமில்லை என்பதால், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
பேரவைத் தலைவரின் உத்தரவின்பேரில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இடைத்தேர்தலில் போட்டியிட முடியாது.  தசரா திருவிழாவை நடத்துவதில் தடையில்லை. ஆனால்,  இடைத்தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளன.  எனவே, அரசு திட்டங்களை அரசியல்வாதிகள் தொடக்கிவைக்க முடியாது.  வளர்ச்சிப் பணிகளை தொடரத் தடையில்லை என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com