குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கைய நாயுடு, செப். 24-ஆம் தேதி பெங்களூருக்கு வருகைதர இருக்கிறார்.
இருநாள் பயணமாக பெங்களூருக்கு செப். 24-ஆம் தேதி வரும் அவர், பெங்களூரு, ஜெயநகரில் உள்ள பிஎச்எஸ் உயர்கல்வி சங்கத்தின் 75-ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.
1942-ஆம் ஆண்டு பிஎச்எஸ் உயர்கல்வி சங்கம் அமைக்கப்பட்டு, பல்வேறு கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த விழாவில், ஆளுநர் வஜுபாய்வாலா, முதல்வர் எடியூரப்பா, நிகண்டு அறிஞர் ஜி.வெங்கடசுப்பையா, பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா, சங்கத் தலைவர் ஜி.வி.விஸ்வநாத், துணைத் தலைவர் ஆர்.வி.பிரபாகர், பொருளாளர் என்.பி.பட் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
மறுநாள், செப். 25-ஆம் தேதி பெங்களூரில் தேசிய ஊழியர் மேலாண்மை மையத்தின் 38-ஆவது ஆண்டுவிழாவை குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு தொடக்கி வைக்கிறார்.
இந்த இரு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்ட பிறகு, அவர் புணே புறப்பட்டுச் செல்கிறார்.