பெங்களூரு: மத்திய அரசிடம் வெள்ள நிவாரண நிதியுதவியைக் கேட்க முதல்வர் எடியூரப்பாவுக்கு நேரமில்லை என்று முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.
இது குறித்து சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது: மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியை மத்திய அரசிடம் கேட்க முதல்வர் எடியூரப்பாவுக்கு நேரமில்லை. ஆனால், காலியாக உள்ள 15 தொகுதிகளில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதையடுத்து, மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து, அவர்களுக்கு ஆதரவான நடவடிக்கை எடுக்க வலியுறுத்த தில்லிக்குச்
சென்றுள்ளார்.
கடந்த ஒரு மாதமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளை, நிலங்களை இழந்து சாலைகளில் தங்கியுள்ளனர். ஆனால், அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு பாராபட்சம் கட்டி வருகிறது. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முதல்வர் எடியூரப்பாவும் தயக்கம் காட்டி வருகிறார். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரு கட்சியின் ஆட்சி உள்ள போதிலும், நிவாரண நிதி பெறுவதில் முதல்வர் எடியூரப்பா தோல்வியடைந்துள்ளார். இது போன்ற சூழலால் மாநிலம் வளர்ச்சி அடைவதென்பது இயலாத ஒன்று. இதனால், மக்கள் வேதனையடைந்துள்ளனர். விரைவில் மாநிலத்தை ஆளும் பாஜக அரசு, ஆட்சியை இழக்கும் என்பதில் சந்தேகமில்லை என அவர் அதில் பதிவிட்டுள்ளார்.