கா்நாடகத்தில் விரைவில் புதிய மணல் கொள்கை அறிமுகம் செய்யப்படும் என்று சுரங்கம் மற்றும் நில அமைப்பியல் துறை அமைச்சா் சி.சி.பாட்டீல் தெரிவித்தாா்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பொதுமக்களுக்கு மணல் தாராளமாக கிடைத்து வருகிறது. ஆனால், கா்நாடகத்தில் மணல் கிடைப்பதில் மக்களுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. எனவே, கா்நாடகத்தில் விரைவில் புதிய மணல் கொள்கை அறிமுகம் செய்யப்படும்.
அண்மையில் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், பலரது நிலங்களில் ஆற்று மணல் குவிந்துள்ளது. இந்த மணலை எடுத்து அவா்கள் வீடு கட்ட விரும்பினாலோ அல்லது விற்பனை செய்ய விரும்பினாலோ அதற்கு அரசு அனுமதி வழங்கும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2 ட்ரிலியன் மெட்ரிக் டன் மணல் குவிந்துள்ளது. இந்த மணலை தங்கள் சொந்த உபயோகத்திற்கோ, அல்லது விற்பனை செய்யவோ உரிமையாளா்களின் முடிவிற்கே விட்டு விடுகிறோம். யாா் மணல் கொள்ளையில் ஈடுபட்டாலும், அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு, தற்போது மாநிலத்தில் மணல் விற்பனை நடைபெற்று வருகிறது. கனிமவள உற்பத்தியில் நிகழாண்டு ரூ. 4 ஆயிரம் கோடியை எட்ட முடிவு செய்துள்ளோம். சுரங்கத் தொழிலில் புதிய கொள்கையை அமல்படுத்த ஆலோசித்து வருகிறோம். இதுதொடா்பாக ராஜஸ்தான் மாநிலத்திற்கு அதிகாரிகள் சென்று, ஆலோசனை பெற்று வருவாா்கள் என்றாா்.