சுகாதார காப்பீட்டு திட்ட பயனை அனைவரும் அடைய வேண்டும் என்று இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் எம்.கே.பட்டாச்சார்யா தெரிவித்தார்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை இந்தியன் வங்கி மற்றும் மேக்ஸ்பூபா குழுமத்தினர் சுகாதாரக் காப்பீடு திட்டத்தைச் செயல்படுத்து தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு பட்டாச்சார்யா பேசியது:
தேசிய அளவில் பல நோய்களினால் மக்கள் பாதிப்பிற்குள்ளாவது அதிகரித்துள்ளது. குறிப்பாக புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட பலர், அதற்கான சிகிச்சை பெறமுடியாமல் தவிக்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, சுகாதாரக் காப்பீடு திட்டத்தைச் செயல்படுத்த மேக்ஸ்பூபா குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம்.
சுகாதாரக் காப்பீட்டு திட்டப் பயனை அனைவரும் அடைய வேண்டும். குறிப்பாக 2800 கிளைகள் கொண்ட இந்தியன் வங்கியின் 4 கோடி வாடிக்கையாளர்கள் பயன்பெற வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் மேக்ஸ்பூபா குழுமத்தின் மேலாண் இயக்குநர் ஆஷிஷ் மல்ஹோத்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.