மஜதவை நம்பியதற்கு பலன் கிடைத்துவிட்டது; அவர்களுடன் கூட்டணி அமைத்ததன் மூலம் காங்கிரஸ் பாடம் கற்றுக் கொண்டது என்றார் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா.
ஹுப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மஜதவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றினோம். ஆனால், அக் கட்சி ஏமாற்றிவிட்டது. கிளி என நினைத்த மஜத, கழுகாக மாறி காங்கிரஸை கொத்திவிட்டது. இதன்மூலம் காங்கிரஸ் பாடம் கற்றுக் கொண்டது.
அனுபவத்தைவிட வேறு பாடம் நமக்கு தேவையில்லை. மஜதவை நாங்கள் விருந்தினராக கெளரவித்தோம். அதுதான் நாங்கள் செய்த மிகப் பெரிய தவறு. இதனை அக் கட்சியினர் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். முன்னாள் அமைச்சர் ஜி.டி.தேவெ கெளடா அண்மையில் அளித்த பேட்டியில், மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்குமாறு குமாரசாமி கூறியதாக அவர் தெரிவித்தார்.
இதன்மூலம் அவர்களது சூழ்ச்சியை உணர முடிகிறது. காங்கிரஸ் கட்சியை அழிப்பதற்கு அவர் உடனிருந்தே முயற்சி மேற்கொண்டுள்ளார். மஜத- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மிக மோசமாக இருந்ததாக, முன்னாள் முதல்வர் குமாரசாமியே ஒப்புக் கொண்டுள்ளார். எனவே, அதுகுறித்து எந்த கருத்தையும் நான் கூறுவதற்கில்லை.
இடைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பெயர்கள் இரண்டொரு நாளில் அறிவிக்கப்படும். 15 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்றார்.