மனித வளத்தை மேம்படுத்த சிறந்த தொழில் கல்வி தேவை என்று முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கல்வி மற்றும் திறன்கள் குறித்த மாநாட்டில் அவர் பேசியது: வரும் நாள்களில் இந்திய மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். கல்வியுடன் மனித வளத்தை மேம்படுத்த சிறந்த தொழில் கல்வியைப் போதிக்க வேண்டும். நமது நாட்டின் கல்வியும், தொழில் திறனும் சர்வதேசத்துக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும். அதற்கான செயல் திட்டங்களை வகுக்க
வேண்டும்.
மத்திய அரசின் கல்விக் கொள்கை இதற்கு வழிவகுக்கும் என நம்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடி கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலத்தில் ஒன்றாக கர்நாடகத்தை அடையாளம் காட்டியுள்ளார். எனவே, மாநிலத்தில் உள்ள கல்வி மையங்கள் கல்வியுடன், தொழில் திறனையும் மாணவர்களுக்குப் போதிக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கான பாடத் திட்டத்தை வகுத்து, அதனைச் செயல்படுத்துவது அவசியம்.
கல்வித் துறையில் நாம் இப்போது செய்யும் மாற்றங்கள் எதிர்க்காலத்தில் மாணவர்களின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்றார். நிகழ்ச்சியில், அமைச்சர் பசவராஜ் பொம்மை, டி-டாக் இந்தியாவின் தலைவர் ஆதித்யகுப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.