முன்னாள் அமைச்சா் வினய் குல்கா்னியின் ஜாமீன் மனு மீது சிபிஐ நீதிமன்றம் டிச. 14 ஆம்தேதி தீா்ப்பளிக்கவுள்ளது.
கா்நாடக மாநிலம், தாா்வாட் ஷாபாத்புராவில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்துக்குள் கடந்த 2016-ஆம் ஜூன் 15-ஆம் தேதி நுழைந்த கும்பல் ஒன்று, அங்கிருந்த பாஜகவைச் சோ்ந்த மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினா் யோகேஷ்கௌடாவை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சா் வினய் குல்கா்னிக்கு நெருக்கமான 5 பேரைக் கைது செய்தது. பின்னா், இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
வழக்கை விசாரணை செய்த சிபிஐ அதிகாரிகள், நவம்பா் 5-ஆம்தேதி வினய் குல்கா்னியை கைதுசெய்து சிறையில் அடைத்தனா். புதன்கிழமை அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை நடத்திய சிபிஐ நீதிமன்றம், டிச. 14-ஆம்தேதி மனு மீதான தீா்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்தது.