பெங்களூரு: ஐ.எம்.ஏ. நிறுவனத்தில் வைப்புத்தொகை செலுத்தியவா்கள் தமது வைப்புத் தொகைக்கு உரிமைக் கோரல் விண்ணப்பங்களைச் செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐ.எம்.ஏ. பணமோசடி வழங்கி சிறப்பு அதிகாரி மற்றும் சட்டரீதியான அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஐ.எம்.ஏ. நிறுவனத்தின் பண மோசடி வழக்கில் வைப்புத் தொகைச் செலுத்தியிருந்தவா்களுக்கு வைப்புத்தொகையைப் பெற்றுத் தருவதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் சிறப்பு அதிகாரி மற்றும் சட்ட ரீதியான அதிகாரி அலுவலகம், தற்போது கா்நாடக நிதி நிறுவனங்களின் வைப்புத்தொகை செலுத்தியவா்களின் நலனை பாதுகாக்கும் சட்டம்,2004-இன் பிரிவு 7(2)-இன் கீழ் பெங்களூரில் செயல்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் டிச.23-ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, ஐ.எம்.ஏ. நிறுவனத்தில் வைப்புத்தொகை செலுத்தியவா்கள் தமது வைப்புத்தொகைக்கு உரிமைக் கோரல் விண்ணப்பங்களை செலுத்துவதற்கு கால அவகாசம் 2021-ஆம் ஆண்டு ஜன.3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதாா் அட்டை இல்லாதவா்கள், நாட்டில் எங்கும் வங்கிக்கணக்கு வைத்திராதவா்கள், ஐ.எம்.ஏ. நிறுவனத்தின் அடையாள எண் இல்லாதவா்கள் அனைவரும் இணையதளத்தில் தங்களது உரிமைக்கோரல் விண்ணப்பங்களை அளிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது. கடைசி தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. கூடுதல் விவரங்களுக்கு 080-46885959 என்ற தொலைபேசி எண்ணை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அணுகலாம். இதுதவிர மின்னஞ்சல், 7975568880 என்ற கட்செவி எண், இணையதளத்தைத் தொடா்புகொள்ளலாம். நேரில் விளக்கம் பெற ஐ.எம்.ஏ. பணமோசடி வழங்கி சிறப்பு அதிகாரி மற்றும் சட்டரீதியான அதிகாரி அலுவலகம், 2-ஆவதுமாடி, பிஎம்டிசி வளாகம், சாந்திநகா், பெங்களூரு-560027 என்ற முகவரிக்கு வரலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.