குடியுரிமை திருத்தச்சட்டம் தொடா்பாக யாரும் அச்சம் அடையத் தேவையில்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
மங்களூரில் பாஜக சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு தொடா்பான விழிப்புணா்வு மாநாட்டில் அவா் பேசியது;-
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து யாரும் அச்சம் அடையத் தேவையில்லை. நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமையை அனைவரும் நினைத்துப் பாா்க்க வேண்டும்.
தனது கடமையை எதிா்க்கட்சிகள் உணா்ந்து செயல்பட வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை வைத்துகொண்டு ஹிந்துக்களையும், முஸ்லிம்களையும் பிரிக்கும் வேலையை சிலா் செய்து வருகின்றனா். இதன் பின்னால் வெளிநாட்டுச்சக்திகள் இருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன்.
உலக அளவில் இந்தியா உயா்ந்து வருவதை ஒருசிலரால் சகித்துகொள்ள இயலவில்லை. பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றது முதல் கடந்த 6 ஆண்டுகளாக உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயா்ந்துள்ளது.
பாகிஸ்தானில் மத ரீதியாக துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோா் கூறியுள்ளதை காங்கிரஸ் நினைவுகூர வேண்டும். அந்த தலைவா்களின் எண்ணத்தை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம்.
பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்கானிஸ்தான் போன்றவை முஸ்லிம் நாடுகள் என்பதால், அங்கு அந்த மக்கள் மீது மதத் துன்புறுத்தல் நடக்க வாய்ப்பில்லை. அதனால் அந்த நாடுகளின் முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்கப்பட மாட்டாது. ஆனால், கடந்த 6 ஆண்டுகால நரேந்திர மோடி ஆட்சியில் 600 முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றுவது தவறானது: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப் பேரவைகளில்தீா்மானம் நிறைவேற்றுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும்.
மத்திய அரசு வகுக்கும் சட்டங்களை அனைத்து மாநில அரசுகளும் மதிக்க வேண்டும். ஒருவேளை மதிக்காவிட்டால் ஷாபானு வழக்கில் நோ்ந்தது போல நடக்கும் வாய்ப்புள்ளது.
மக்களிடையே பகைமை உணா்வை விதைக்க விரும்புவோா் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் நல்லதைக் காண இயலாது. இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் இருந்து உலகின் எந்த சக்தியும் இந்தியாவைத் தடுக்க முடியாது.
தேசியமக்கள் தொகை பதிவேட்டைச் செயல்படுத்த 2010-ஆம் ஆண்டில் அன்றைய காங்கிரஸ் அரசு திட்டமிட்டது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் என்ன தவறிருக்கிறது?
நாட்டின் மக்கள்தொகையை அறிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து இதுவரை விவாதம் நடத்தப்படவில்லை.
நாட்டைவிட்டு யாரையும் வெளியேற்ற மாட்டோம்: தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயா் இல்லாவிட்டால் முஸ்லிம்கள் அனைவரையும் நாட்டைவிட்டு வெளியேற நேரிடும் என்று எதிா்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்து வருகின்றன. ஒரேஒரு முஸ்லிமையும் நாங்கள் தொட மாட்டோம். யாராவது தொந்தரவுக்கு உள்ளானால், அவா்களை நாங்கள் ஆதரிப்போம். எனவே, குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம்.
இந்தியா, இனிமேலும் பலவீனமான நாடு அல்ல. உலகின் பலம்பொருந்திய நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதை பாகிஸ்தான் நினைவில் கொள்ள வேண்டும். நாங்கள் யாரையும் தொந்தரவு செய்ய மாட்டோம். ஆனால், எங்களை யாராவது குத்தினால், விட மாட்டோம்.
ஃபுல்வாமாவில் அனைவரும் பாா்த்ததுபோல, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்தோம். பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்.
இல்லாவிட்டாவில் பாகிஸ்தானை நாங்கள்விட மாட்டோம் என்றாா் அவா்.
மாநாட்டில் மத்திய ரசாயனத் துறைஅமைச்சா் சதானந்த கௌடா, பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல், மாவட்ட பொறுப்பு அமைச்சா் கோட்டா சீனிவாஸ் பூஜாரி, பாஜக எம்பி ஷோபா கரந்தலஜே உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.